

பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் சுப்பு, அருள், கண்ணன், ஷாஜகான், ரவி ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மண்டபம் நடுக்கடல் பகுதியில் உள்ள புள்ளிவாசல் தீவு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கிய இந்த படகு கடலில் மூழ்கியது. படகு கடலில் மூழ்கிய நிலையில் அதில் இருந்த ஷாஜகான் என்ற மீனவர் ஒருவரை தவிர மற்ற 4 மீனவர்களும் நீந்தி கரை சேர்ந்து விட்டனர்.
ஆனால் கடலில் மூழ்கிய மண்டபம் அம்பலகாரை தெருவை சேர்ந்த ஷாஜகான் (வயது 45) மீனவரை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. மாயமான மீனவரை இந்திய கடலோர காவல் படையினரும், கடலோர போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று மாலை வரையிலும் மாயமான மீனவர் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.