பெண்ணை கத்தியால் குத்திய தையல் தொழிலாளி கைது தந்தையுடனான தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

திருப்பூரில் நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பெண்ணை கத்தியால் குத்திய தையல் தொழிலாளி கைது தந்தையுடனான தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
Published on

திருப்பூர்

திருப்பூரில் நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார். தந்தையுடனான தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் அடைந்த தையல் தொழிலாளி இந்த சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி(வயது 45). இவர் நேற்று மதியம் திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் ரங்கநாயகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே அவர், தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து ரங்கநாயகியை குத்த முயன்றார். இதனால் பதறி போன அவர் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனாலும் விடாமல் துரத்திய அந்த வாலிபர், அவரை கத்தியால் குத்த முயன்றார். அப்போது தடுக்க முயன்ற ரங்கநாயகியின் கையில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் அவர் அலறி துடித்தார்.

இதைப்பார்த்த அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளும், பொதுமக்களும் ஓடிவந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து கத்தியை பறித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி அங்கு விரைந்து வந்த போலீசார் கத்திக்குத்து காயத்துடன் இருந்த ரங்கநாயகியை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அந்த வாலிபர் ஸ்ரீவித்யா நகர் பகுதியை சேர்ந்த துரைரத்தினம் தம்பதியின் மகன் அருண்(30) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ரத்தினத்தை பிரிந்த துரை, தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் துரைக்கு, ரங்கநாயகியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்து கொண்ட துரையின் மகன் அருண், தந்தையை கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர் ரங்கநாயகியுடனான பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளார். ரங்கநாயகியை கண்டித்தும் அவர் இதை கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அருண் தனது தந்தையுடன் பழகி வரும் ரங்கநாயகியை நேற்று கத்தியால் குத்த முயன்றார். அப்போது தடுக்க முயன்ற ரங்கநாயகிக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது.

இதையடுத்து அருண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அத்துடன் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com