

சென்னை,
நீட் தேர்வுக்கு எதிரான திராவிட கழக இருசக்கர வாகன பிரசாரத்திற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முழுவதும் எந்தெந்தப் பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற உள்ளது என்பது குறித்த முழுமையான பட்டியலை முன்கூட்டியே காவல்துறையிடம் வழங்கப்பட்டு, அந்தந்த காவல்நிலையங்களில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறைத் தலைவர் திராவிடர் கழகத்தினருக்கு அறிவுறுத்திய நிலையில், பிரச்சாரம் தொடங்கும் இன்று காலை அதற்கான அனுமதியை மறுத்திருப்பதோடு, பெரியார் திடலை காவல்துறையின் மூலம் முடக்கியிருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.
தந்தைப் பெரியாரை தன் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக முன்னிறுத்தி அரசியல் செய்யும் த.வெ.க., பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு அவரின் வழியில் நிர்வகிக்கப்பட்டு வரும் திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், த.வெ.க. ஆட்சி என்பது திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றும் ஆட்சி அல்ல என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அறவழிப் போராட்டம் நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை மதித்து செயல்பட வேண்டிய த.வெ.க. அரசு, தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காவல்துறையிடம் அனுமதி கேட்டு அமைதியான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த திராவிடர் கழகத்தினரின் இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதியை மறுத்திருப்பது த.வெ.க. அரசின் சகிப்புத்தன்மையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, திராவிடர் கழகம் திட்டமிட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு உடனடியாக அனுமதி வழக்கிடுவதோடு, இனிவரும் காலங்களில் அரசியல் பாகுபாடின்றி அனைவருக்கும் அமைதியான முறையில் பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நடத்திடுவதற்கான அனுமதியை வழங்கி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.