முழு ஊரடங்கு நாட்களில் காய்கறி, பழங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு

காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடை விதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

சமூக இடைவெளியை மக்கள் பல இடங்களில் காற்றில் பறக்கவிட்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனிடையே, பல்வேறு இடங்களில் காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தநிலையில், காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் மருத்துவர் கே. கோபால், இ.ஆ.ப., வேளாண்மை - உழவர் நலத்துறை இயக்குநர், வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் க.வீ. முரளிதரன், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தொகை சுமார் 7 கோடி.

* காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18,000 மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது.

* சென்னையை பொறுத்தவரை தினம்தோறும் 1500 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படும்.

* சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2,770 வாகனங்கள் மூலம் 2,228 மெட்ரிக்டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருயது நேரடியாக கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும்.

* தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகத் தொடரை மேலும் விரிவுபடுத்திட.,

* நின்சாகார்ட்,

* வே கூல்,

* பழமுதிர் நிலையம்,

* தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் இணையம்

* அஹிம்சா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றையும் ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

* தமிழகம் முழுவதும் 194 குளிர்பதன இடங்கள் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவில் உள்ளன. அதில் தற்போழுது சுமார் 3,000 மெட்ரிக் டன் மட்டுமே விளை பொருட்கள் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 15,527 மெட்ரிக்டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.

* உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையை பூர்த்தி செய்திட முதல்வர் வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் விரிவான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* தினமும் காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com