தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த வேண்டும்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த வேண்டும்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூரில், மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 8-வது மாநாடு நேற்று நடந்தது. சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலையரசி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி, துணை செயலாளர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு, நகர்ப்புறத்திற்கு விரிவுபடுத்த வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை அரசு தடுக்க வேண்டும். பெண் சிசு கொலை, கருக்கலைப்பு, கருமுட்டை வினியோகம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கான திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிட வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக மகேஸ்வரியும், செயலாளராக சின்ன பொண்ணும், பொருளாளராக ஷர்மிளா பேகமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com