

ஊட்டி
அரசு தேயிலை தோட்ட கழகம் மூடப்படாது என்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உறுதியாக கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் அரசு தேயிலை தோட்ட கழகத்தை(டேன்டீ) புனரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி., கலெக்டர் அம்ரித், தேயிலை தோட்ட நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச வீடு
அரசு தேயிலை தோட்ட கழகத்தில் கடந்த ஆட்சியில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு ஒப்புவிப்பு ஊதியம், மருத்துவ ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அவற்ற வழங்க ரூ.30 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
நடுவட்டம் பகுதியில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தற்போது தங்கியுள்ள வீடுகளை காலி செய்ய தேவை இல்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கோரிக்கையை ஏற்று இலவச வீடு கட்டி தர தமிழக அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளது.
மூடப்படாது
அரசு தேயிலை தோட்ட கழகத்தை புனரமைப்பது தொடர்பாக தனியார் ஏஜென்சியிடம் திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பார். ஒருபோதும் அரசு தேயிலை தாட்ட கழகம் மூடப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.