“முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது” - ஆளுநரை சந்தித்த பின்னர் அமைச்சர்கள் பேட்டி

7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
“முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது” - ஆளுநரை சந்தித்த பின்னர் அமைச்சர்கள் பேட்டி
Published on

சென்னை,

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

அண்மையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இடஒதுக்கீடு மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினர். சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 7.5% சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் அறிவுரைப்படி ஆளுநரை சந்தித்தோம். தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆளுநரிடம் விளக்கி கூறினோம். நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநரின் பரிசீலனையில் உள்ள மசோதாவுக்கு கட்டாயப்படுத்த முடியாது என்றும் முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் இட ஒதுக்கீடு வழங்கினால் தான், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவராக முடியும் என்பதால் சமூக நீதியை பாதுகாக்க விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com