

செங்குன்றம்,
பொன்னேரி அருகே உள்ள பசுவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா (வயது 72). இவர், அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உண்டு. இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இவருடைய மகன் ரங்கநாதன் (50), சென்னை வானகரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜெகன் (30). இவர், கடந்த 20-ந்தேதி பசுவன்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்து தங்கினார்.
தோசை கல்லால் அடித்துகொலை
நேற்று முன்தினம் இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜெகன், பாட்டியிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். அவர் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெகன், வீட்டிலிருந்த தோசை கல்லை எடுத்து மூதாட்டி சுசீலாவை அடித்தார். இதில் பலத்த காயமடைந்த சுசீலா, பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடி தலைமறைவான பேரன் ஜெகனை தேடி வருகின்றனர்.