

சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க 'ஜூசாட்-1 ஏ' என்று அழைக்கப்பட்ட 'இ.ஓ.எஸ். 5' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டது.
இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததையடுத்து ராக்கெட்டுக்கான 'கவுண்ட்டவுன்' நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
இந்த நிலையில், ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் முடிந்ததையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமே ஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.