ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர் - நயினார் நாகேந்திரன்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விகிதம் பெருமளவு குறைந்து போனது.
 நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை ஆளும் தவெக அரசும், உயர்கல்வித் துறை அமைச்சரான விஸ்வநாதன் அவர்களும் சற்று கவனமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முந்தைய திமுக ஆட்சியில் அரசு கல்லூரிகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவால் தான், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விகிதம் பெருமளவு குறைந்து போனது. ஒரு காலத்தில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது, மிகப்பெரும் சாதனையாகவும், வளமான எதிர்காலத்திற்கான திறவுகோலாகவும் கருதப்பட்டது.

அடிப்படை வசதிகள்

ஆனால், தற்போது தகுதியான ஆசிரியர்கள், தரமான கட்டிடங்கள், நவீன ஆய்வகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு கல்லூரிகளை தேர்ந்தெடுக்க யாரும் விரும்புவதில்லை என்பதே கசப்பான உண்மை. கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசு கல்விக் கூடங்களை நிராகரித்து விட்டு, மக்கள் தனியார் கல்வி நிலையங்களை நோக்கி படையெடுப்பது, அரசு இயந்திரத்திற்கே அவமானம்.

எனவே, சுமார் அரை நூற்றாண்டிற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன், கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து ஊசலாடி கொண்டிருக்கும் உயர்கல்வித் துறையை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com