தனிமையில் உல்லாசம்... 600 அடி பள்ளத்தில் உடல்... கள்ளக்காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சுமதி செல்போனுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
தனிமையில் உல்லாசம்... 600 அடி பள்ளத்தில் உடல்... கள்ளக்காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (வயது 32) என்பவரும், நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி (30) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதற்கிடையே சுமதியை காணவில்லை. இதுகுறித்து சண்முகம் மற்றும் உறவினர்கள் ஏற்காடு போலீசில் கடந்த 25-ந் தேதி, சுமதியை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தனர். சுமதி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அன்று மாலையே அதே பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரது கடையில் ஒரு பார்சல் கொடுக்கப்பட்டது.

அந்த பார்சலை வெங்கடேஷ் என்பவர் கொடுத்ததாக கூறி சண்முகத்திடம் கொடுக்கப்பட்டது. பார்சலை பிரித்த சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். அதில் தன்னுடைய காதல் மனைவி சுமதியின் தாலி இருந்தது. இதனால் மனைவி மாயமான விவகாரத்தில் வெங்கடேசுக்கு தொடர்பு இருப்பதாக சண்முகம் சந்தேகம் அடைந்தார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார், வெங்கடேஷ் யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடேஷ் (22) அதே பகுதியில் வசித்து வந்ததும், அவர் சுமதியின் கள்ளக்காதலன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேசை பிடித்து விசாரணை நடத்திய போது, பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின.

அதன் விவரம் வருமாறு:-

சுமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த 23-ந் தேதி வெங்கடேஷ், சுமதி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது சுமதி செல்போனுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

இதுகுறித்து வெங்கடேஷ், சுமதியிடம் கேட்டுள்ளார். அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், சுமதி அணிந்து இருந்த துப்பட்டாவால் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அப்படி இருந்தும் ஆத்திரம் தீராத வெங்கடேஷ், சுமதியை மூட்டையாக கட்டி ஏற்காடு- குப்பனூர் சாலையில் முனியப்பன் கோவில் அருகில் சுமார் 600 அடி பள்ளத்தில் வீசி உள்ளார்.

வெங்கடேசின் இந்த கொடூர செயலை கேட்டு அதிர்ந்த போலீசார், சுமதியின் உடலை கட்டி வீசிய மூட்டையை தேடும் பணியை தொடங்கினர். தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் உதவியுடன் நேற்று மூட்டை தேடி கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்ட அந்த மூட்டையில் சுமதியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

தொடர்ந்து சுமதியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கொலை ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com