

சென்னை,
தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,660 ஆண்கள், 2,460 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 120 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 972 பேரும், கோவையில் 911 பேரும், செங்கல்பட்டில் 531 பேரும், திருப்பூரில் 473 பேரும், ஈரோட்டில் 397 பேரும், சேலத்தில் 310 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசியில் 19 பேரும், பெரம்பலூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 25 மாவட்டங்களில் பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்துள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில் 12 வயதுக்குட்பட்ட 182 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 959 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 14 லட்சத்து 2 ஆயிரத்து 914 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 10 ஆயிரத்து 882 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 25 ஆயிரத்து 944 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 97 ஆயிரத்து 956 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 5 ஆயிரத்து 651 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 ஆயிரத்து 584 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 820 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
26 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 16 பேரும் என 26 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 8 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், கோவை, ஈரோடு, காஞ்சீபுரம், திருச்சியில் தலா 2 பேரும் உள்பட 13 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. உயிரிழந்த 26 பேரும் இணை நோயுள்ளவர்கள்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 759 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 23 ஆயிரத்து 144 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 342 பேரும், செங்கல்பட்டில் 1,426 பேரும், கோவையில் 2 ஆயிரத்து 734 பேரும் அடங்குவர். இதுவரையில் 32 லட்சத்து 51 ஆயிரத்து 295 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 828 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.