

சென்னை,
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் நேற்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது. 2ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள். தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தாமாக முன்வந்து 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 93 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.