புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு காப்பீடு கட்டாயம் என்பது நிறுத்தி வைப்பு உத்தரவிட்ட நீதிபதியே அறிவித்தார்

வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்த நீதிபதியே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு காப்பீடு கட்டாயம் என்பது நிறுத்தி வைப்பு உத்தரவிட்ட நீதிபதியே அறிவித்தார்
Published on

சென்னை,

சாலை விபத்து தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, செப்டம்பர் 1-ந்தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வகையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து போக்குவரத்துத்துறை சார்பிலும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், பொதுக்காப்பீட்டு மன்றம் சார்பில் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நிறுத்திவைப்பு

அதில், 'ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் தயாராகி வரும் அதே நேரத்தில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் பிரதிநிதிகளாக காப்பீட்டு நிறுவனம் செயல்படுவதால், இந்த ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற சாப்ட்வேரில் உரிய மாற்றம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வைத்தியநாதன், பொதுக்காப்பீட்டு மன்றம், காப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர், போக்குவரத்து துறை இணை ஆணையர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து அவர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டார். அதேவேளையில், செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

பின்னர், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com