

சென்னை,
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அ நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.
இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால், திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பின்னர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கனிமொழி எம்.பி உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில் புறப்பட்டு சென்ற கனிமொழி மற்றும் பொன்முடி ஆகியோர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொண்டர்கள் அதிகரிப்பால் அந்தப் பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.