கேரள நிலச்சரிவு சம்பவம் வேதனையளிக்கிறது - நயினார் நாகேந்திரன்

நிலச்சரிவுகளை தடுக்க கேரள அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள நிலச்சரிவு சம்பவம் வேதனையளிக்கிறது - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சரிவில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல், மிகுந்த மன வேதனையளிக்கிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, நிலச்சரிவின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் விரைவில் மீட்கப்பட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்தித்துக் கொள்கிறேன். சுரங்கப்பாதையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண், ஒழுங்கு முறையின்றி மலைபோல ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டதே இந்த பேரழிவிற்கு காரணம் என கேரள அரசு கூறுவது, கடும் அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பில் அனைத்து மாநில அரசுகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

எனவே, "கடவுளின் தேசம்" என புகழப்படுமளவிற்கு அபரிமிதமான இயற்கை அழகைக் கொண்ட கேரள மாநிலம், இதுபோன்ற தொடர் நிலச்சரிவுகளால் சிதைவடைவதை தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com