அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வில்லுக்குறி அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணத்த கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
Published on

திங்கள்சந்தை, 

வில்லுக்குறி அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணத்த கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அம்மன் கோவில்

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மணக்கவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பூஜைகள் முடிந்த பிறகு கதவை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் பூஜகள் செய்வதற்காக பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூசாரி ஊர் தலைவர் சுயம்புலிங்கத்திற்கு தகவல் கொடுத்தார். இதுபற்றி ஊர் தலைவர் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பணம், நகை கொள்ளை

உடனே போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலில் அம்மன் சிலையில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 9 கிராம் தங்க பொட்டு, கம்மல் போன்ற நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அம்மன் சிலை அருகே கோவில் பணிக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவிலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com