சொத்தில் மகளுக்கு பங்கு கேட்ட தாய்க்கு சரமாரி கத்திக்குத்து

விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தில் மகளுக்கு பங்கு கேட்ட தாயை கத்தியால் சரமாரியாக குத்திய வாலிபரை போலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
சொத்தில் மகளுக்கு பங்கு கேட்ட தாய்க்கு சரமாரி கத்திக்குத்து
Published on

விக்கிரவாண்டி

விவசாயி

விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாத்தனூரை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவரது 2-வது மனைவி முனியம்மாள்(வயது 52). இவர் மூலம் சிவா(24) என்ற மகனும், சந்தியா தேவி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் செல்வராஜ் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் கடந்த 18 வருடங்களாக முனியம்மாள் அவரது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். செல்வராஜ் பெரியதச்சூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை முனியம்மாளுக்கு பிரித்து தருவதாக கூறியதன் பேரில் நேற்று செல்வராஜ், முனியம்மாள், சிவா ஆகியோர் விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு செல்வராஜ் அவரது மகன் சிவாவுக்கு சொத்தை எழுதி வைத்தார்.

சரமாரி கத்திக்குத்து

அப்போது முனியம்மாள் அந்த சொத்தில் பாதியை சந்தியாதேவிக்கு எழுதி தருமாறு கூறினார். இதனால் தாய்-மகன் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவா தன்னிடம் இருந்த கத்தியால் முனியம்மாளின் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முனியம்மாளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வலைவீச்சு

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்கு பதிவு செய்து சிவாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சொத்தில் மகளுக்கு பங்கு கேட்ட தாயை அவரது மகன் கத்தியால் குத்திய சம்பவம் விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com