கூலிப்படையை ஏவி மருமகனை தீர்த்துக்கட்டிய மாமியார் அளித்த பகீர் வாக்குமூலம்...!

தென்காசியில் கூலிப்படையை ஏவி மருமகனை தீர்த்துக்கட்டியதாக கைதான மாமியார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கூலிப்படையை ஏவி மருமகனை தீர்த்துக்கட்டிய மாமியார் அளித்த பகீர் வாக்குமூலம்...!
Published on

தென்காசி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 30), கார் டிரைவர். இவருடைய மனைவி மாலா (26). இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.

கடந்த 3-ந்தேதி அரவிந்த் தென்காசிக்கு காரில் அழைத்து வரப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கல்குவாரி குட்டையில் வீசப்பட்டு இருந்தது. இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் பொன்னரசு (20) என்பவரை தென்காசி போலீசார் கைது செய்து இருந்தனர். மேலும் சீதாராமன், மணிகண்டன் ஆகிய 2 பேர் சங்கரன்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கைதான பொன்னரசுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக நேற்று அரவிந்தின் மாமியார் பொன்ராணி (44) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொன்ராணியிடம் நடத்திய விசாரணையின்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பொன்ராணியின் மகள் மாலா விளாத்திகுளத்தில் பியூட்டி பார்லர் நடத்தியுள்ளார். அதனை நடத்தக்கூடாது என்று அரவிந்த் கூறியுள்ளார். மேலும் அரவிந்த் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனது மகள் மாலாவுடன் அரவிந்த் சரியாக வாழ்க்கை நடத்தவில்லை என்று கூறி பொன்ராணி விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், மாலா இதற்கு சம்மதிக்கவில்லை. தனது கணவர் உடனேயே இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக மாமியார் பொன்ராணிக்கும், மருமகன் அரவிந்திற்கும் இடையே தகராறு வலுத்துள்ளது. இதனால் பொன்ராணி மருமகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி பொன்ராணி கீழப்புலியூரில் தனக்கு தெரிந்த சீதாராமன் மற்றும் அவரது நண்பர்களிடம் கூறியுள்ளார். மேலும், மருமகனை கொலை செய்ய ரூ.8 லட்சம் தருவதாக பேரம் பேசியுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.4 லட்சம் பல தவணைகளில் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் அரவிந்தை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு கடந்த 3-ந் தேதி அரவிந்தை தென்காசிக்கு வரவழைத்து கொலை செய்து உடலை கல்குவாரி தண்ணீரில் வீசி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக அருணாசலம் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com