பாம்பன்-ராமேசுவரத்தை இணைக்கும் புதிய ரெயில்வே பால பணிகள் தீவிரம்

பாம்பன்-ராமேசுவரத்தை இணைக்கும் புதிய ரெயில்வே பால பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாம்பன்-ராமேசுவரத்தை இணைக்கும் புதிய ரெயில்வே பால பணிகள் தீவிரம்
Published on

ராமேசுவரம்,

தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரையாக வருகை தருகிறார்கள். அவர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்கிறார்கள்.

இதற்கிடையே மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் வாராவதி கடல் பகுதியில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் 1914 ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த ரெயில் பாலத்தின் மையப்பகுதி கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையை பெற்றது. அத்துடன் நாட்டின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாகவும் அடையாளம் காணப்பட்டது.

இந்த தூக்கு பாலம் ஒரு பொறியாளர் தலைமையில் ரெயில்வே ஊழியர்கள் மூலம் பாரமரிக்கப்பட்டு வந்தது. தூக்கு பாலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த பாலம் அமைந்திருந்தது. 105 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாம்பன் ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பீட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின.

இதனைத்தொடர்ந்து, பாம்பன் கடல் பகுதியில் துளையிட்டு மண் ஆய்வுப் பணி தொடங்கியது. விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கெரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. இதன் பின்னர் 6 மாதம் கழித்து குறிப்பிட்ட பணியாளர்கள் மூலம் மீண்டும் பணிகள் தொடங்கின.

2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலத்தின் மையப்பகுதியில் மேல்நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தூக்கு பாலம் பொருத்தும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

இந்த பணிகள் முடிவடைந்தவுடன் தண்டவாளம் பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டு இருபுறமும் தூண்கள் அமைப்படும். இன்னும் 6 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com