வருமானவரித்துறையின் புதிய இணையதளம் 15-ந்தேதிக்குள் சரி செய்யப்படும் - இன்போசிஸ் நிறுவனம் உறுதி

வருமானவரித்துறையின் புதிய இணையதளம் 15-ந்தேதிக்குள் சரி செய்யப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் இன்போசிஸ் நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
வருமானவரித்துறையின் புதிய இணையதளம் 15-ந்தேதிக்குள் சரி செய்யப்படும் - இன்போசிஸ் நிறுவனம் உறுதி
Published on

சென்னை,

டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் நேற்று சந்தித்தார். அப்போது, வருமான வரி கணக்குகளை இ-தாக்கல் செய்யும் புதிய இணையதளம் தொடங்கி இரண்டரை மாதம் ஆகியும் வரி செலுத்துவதில் தாமதம் மற்றும் வரி செலுத்துபவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள், ஏமாற்றங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் கேட்டார். அதற்கு இன்போசிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, அதிக ஆதாரங்கள் மற்றும் பல்வேறு முயற்சிகள் தேவைப்படுவதால் சேவைகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை நிறுவனம் சார்பில் ஒப்புக்கொண்டார்.

அத்துடன், வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் வரி செலுத்துபவர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் தங்குதடையின்றி புதிய இணையதளத்தில் வேலை செய்யலாம். சுமுகமான செயல்பாட்டுக்காக 750 பேர் குழுவாக பணியாற்றி வருகின்றனர். அத்துடன் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவின் ராவ் தனிப்பட்ட முறையில் இந்த திட்டத்தை மேற்பார்வையிடுகிறார். நிறுவனமும் துரிதமாக செயல்படுகிறது. விரைவில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com