

சென்னை,
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் நேரலையில் பேசினார். அப்போது அவர் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார். மேலும் அவர் தனது கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிடும் என அறிவித்தார்.
அண்ணாமலை இன்று அரசியலை கட்சியை தொடங்கியது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தனது இயக்கத்தில் சேர்வதற்கான இணையதள முகவரியையும் தெரிவித்தார். அதில் உடனடியாக பலரும் சேர தொடங்கினார்கள். மதியம் 1 மணி வரையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிலையில், இரவு 7.40 மணி வரையில் ஆன்லைன் மூலம் அண்ணாமலை இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 8 லட்சத்தை (8,14,343) தாண்டியது. நிமிடத்திற்கு 200, 300 என அடுத்தடுத்து உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போதைய நிலவரப்படி (நள்ளிரவு 1.40) அண்ணாமலை இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 11 லட்சத்தை (11,04,330) தாண்டியுள்ளது.
www.wetheleader.org இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். அண்ணாமலை புது கட்சி அறிவிப்பை வெளியிட்டதும் தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.