பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடங்கியது

ஓணம் விழாவில் வருகிற 26-ம் தேதி வரை 10 நாட்கள் தினம் ஒரு வடிவத்தில் அத்தப்பூ கோலமிடப்படுகிறது.
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா
அத்தப்பூ கோலமிட்ட அரண்மனை ஊழியர்கள்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடங்கியது. அத்தப்பூ கோலம், ஓண விருந்து மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பத்மநாபபுரம் அரண்மனை

கேரள மக்களின் வசந்த விழாவான ஓணம் விழாவை கேரள மாநிலத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் சாதிமத பேதமின்றி கொண்டாடி வருகிறார்கள். இவ்விழா கேரள மாநிலத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு அலுவலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கேரளம் மாநிலத்தில் நடப்பது போல் தமிழக பகுதியில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையிலும் 10 நாட்கள் ஓணம் விழா கொண்டாடுவது வழக்கம். கேரள அரசின் தொல்லியல் ஆய்வு துறையால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது. இக்கோவிலில் இந்த ஆண்டின் ஓண விழா இன்று காலை தொடங்கியது. அரண்மனை முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், அரண்மனை அதிகாரி சது குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

அத்தப்பூ கோலம்

இதனை தொடர்ந்து கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்த அரண்மனை பெண் ஊழியர்கள் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமந்து அவர்கள் ஆடி மகிழ்ந்தனர். ஊழியர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

ஓணம் விழாவில் வருகிற 26-ம் தேதி வரை 10 நாட்கள் தினம் ஒரு வடிவத்தில் அத்தப்பூ கோலமிடப்படுகிறது. அதுபோல் ஓண விருந்து மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவ்விழாவை முன்னிட்டு அரண்மனை கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com