

மணல்மேடு:
மணல்மேடு அருகே உள்ள சித்தமல்லி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பிரகாஷ் (வயது32). இவர் சம்பவத்தன்று வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோது சித்தமல்லிக்கும் குறிச்சிக்கும் இடைபட்ட சாலையின் நடுவே குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி மகன் ரஞ்சித் (38) என்பவர் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு அந்த வழியாக சென்று வருவோரை மிரட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று அரிவாளை கொண்டு சாலையில் தேய்த்து நெருப்பு பொறியை பறக்க விட்டதாகவும், இதைக்கண்டவர்கள் விலகி ஓடியதாகவும், அந்த நேரத்தில் அந்த வழியே சென்ற பிரகாசை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ் மணல்மேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட ரஞ்சித்தை கைது செய்தனர்.