புகாரை வாபஸ் பெறுமாறு பெண்ணை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

புகார் அளித்தால் இழந்த நகையை மீட்டு தருவதாக கூறி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைத்து உள்ளார்.
புகாரை வாபஸ் பெறுமாறு பெண்ணை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
Published on

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், மாலதி (வயது 35). இவரிடம் 33 பவுன் நகையை பெற்று மோசடி செய்ததாக அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த தளவாய்புரம் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராம்குமார் (36) என்பவரை 2023-ம் ஆண்டு கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு ராம்குமார், மாலதியை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மாலதியை செல்போனில் தொடர்பு கொண்ட சத்யசீலா என்பவர் தானும் ராம்குமாரால் ஏமாற்றப்பட்டதாகவும் தன்னுடன் வந்து புகார் அளித்தால் இழந்த நகையை மீட்டு தருவதாக கூறி அழைத்து உள்ளார்.

இதை நம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த மாலதியை ராம்குமார், சத்யசீலா ஆகிய இருவரும் சேர்ந்து புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாலதி கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி ராம்குமார், சத்யசீலா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சத்யசீலாவை கைது செய்தனர். ராம்குமாரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சத்யசீலா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கொலை வழக்கில் ராம்குமார் உடன் கைது செய்யப்பட்டவர் ஆவார். இதையடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com