பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் தினசரி சந்தையில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
Published on

பூக்கள் விலை உயர்வு

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 3 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாக இருந்தது. அதே நேரம் சுப முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்ச்சியாக வருவதால், அவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது.

கடந்த 7-ந் தேதி கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.560-க்கும், 7-ந் தேதி கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ.360-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் கடந்த 7-ந் தேதி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. மேலும் கடந்த 7-ந் தேதி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.

பூக்கள் விலை 'கிடுகிடு' என உயர்ந்து இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com