விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கோப்புப்படம்
விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறையாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் துறையாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறையாகவும் ஜவுளித்துறை விளங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் முதுகெலும்பாக செயல்படுபவர்கள் விசைத்தறி உரிமையாளர்கள்.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மின்கட்டண உயர்வு, வாடகை உயர்வு, உதிரிபாகங்கள் உயர்வு என செலவினங்கள் அதிகரித்து விட்டதால், செலவுக்கேற்ப தங்கள் ஊதியம் உயர்த்தப்பட வேண்டுமென்றும், 1991-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஊதியம் உயர்த்தப்பட்டது என்றும், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 சதவீத ஊதிய உயர்வுக்கான உடன்பாடு ஏற்பட்டது என்றும், ஆனால், இந்த ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், இந்த நிலையில் 2022-ம் ஆண்டு ஊதிய உயர்வு உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு பிரிவினரும், புதிய ஊதிய உயர்வு கோரி மற்றொரு பிரிவினரும் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் ஊதிய உயர்வு குறித்து எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் பொருட்டு, சங்கத்தைச் சேர்ந்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உத்தேசித்துள்ளதாக அதன் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
விசைத்தறித் தொழிலில் நேரடியாக நான்கு லட்சம் பேரும் மறைமுகமாக மூன்று லட்சம் பேரும் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி 11-04-2025 முதல் தொடங்கும்பட்சத்தில் ஒரு நாளைக்கு 35 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தகாலத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சரும், மாவட்ட அமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஊதிய உயர்வுக்கு தீர்வு காண்பார்கள். தற்போது, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டே போகிறது. ஒரு சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
2022-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிற நிலையில், முதல்-அமைச்சர் இதில் நேரடியாக தலையிட்டு, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தையும், ஜவுளி உற்பத்தியாளர்களையும் அழைத்துப் பேசி விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.