போராட்டக்காரர்கள் மறியல்; தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களின் மறியலால் தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மறியல்; தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 100வது நாளாக நடக்கிறது.

இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். ஏறக்குறைய 2 ஆயிரம் கடைகள் ஆட்சியர் அலுவலக பகுதியில் மூடப்பட்டன. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களில் சிலர் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் கலகக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

போலீசார் மற்றும் வன்முறையாளர்கள் இடையேயான மோதலில் போலீஸ் வாகனம் ஒன்று கவிழ்க்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனால் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. எனினும், அவற்றை கடந்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து பேரணியாக முன்னேறி சென்று ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இருந்த சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டன. டயர்களும் கொளுத்தப்பட்டன. இதனால் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.

வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக தூத்துக்குடிக்கு விரைந்து சென்றுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலையில் பேக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com