

மதுரை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசும் பல்வேறு கட்ட நடவடிக்கைககளை எடுத்து வருகிறது.
மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 70 சதவீதம் பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்களாகவும், 30 சதவீதம் பேர் புறநகர் பகுதியை சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்னத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி மதுரையில் நேற்று ஒரே நாளில் 3,174 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி மதுரையில் இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 460 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இன்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் தற்போது வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திகொண்டனர். மதுரையில் 113 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.