ஆணவகப்படுகொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது - திருமாவளவன்

ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
Published on

சென்னை,

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியதாவது:-

வெட்டி படுகொலை

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தை சார்ந்த ராமலட்சுமி என்பவர் தலித் சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலித்ததால், அவரை அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருக்கிறார். அதனையொட்டி கொலையாளி முத்துக்கிருஷ்ணனை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.

தாக்கியும் படுகொலை

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மயிலோடை கிராமத்தை சார்ந்த அபி செல்வி என்பவர் ஒரு தலித் இளைஞரை காதலித்தார் என்பதால், அவரது அண்ணன் சிவஞானம், அம்மா எஸ்தர் பாலின் மற்றும் அவரது உறவினர் சங்கரலிங்கம் ஆகியோர் அவருக்கு நஞ்சு கொடுத்தும் கடுமையாக தாக்கியும் படுகொலை செய்துள்ளனர்.

தற்கொலை நாடகமாடியுள்ளனர்

ஆனால், அபிசெல்வி தற்கொலை செய்துகொண்டார் என நாடகமாடியுள்ளனர். பின்னர், விசாரணையில் 'இது தற்கொலையல்ல; கொலை' என உடற் கூராய்வு அறிக்கை' அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், அவரது தாயார் எஸ்தர் பாலின் மற்றும் சிவஞானத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது.

வேதனையளிக்கிறது

தமிழ்நாட்டில் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது

ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலை இந்திய மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாகும்.

கௌரவம் மற்றும் பாரம்பரியம்

இந்தியாவிலேயே முதன்முறையாக 2019ஆண்டு, ராஜஸ்தான் அரசு ஆணவ கொலைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து, கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆணவ கொலைகளுக்கு எதிராக 'கௌரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம்-2026 நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு நெல்லையில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கென ஒரு சட்டத்தை இயற்றிட வேண்டுமென தவெக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்

இந்நிலையில், தற்போதைய தவெக அரசு 'கேஎன் பாஷா ஆணையத்தின்' பரிந்துரைகளை பெற்று ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com