திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது.. அச்சமின்றி புனித நீராடிய பக்தர்கள்

பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்தைய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அமாவாசை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று பகல் வரை இருந்தது. எனவே, நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் திடீரென கடல் நீர் உள்வாங்கியது.அதன்பின்னர் சிறிது நேரத்தில் கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது. பின்னர் மாலையில் மீண்டும் சுமார் 80 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.
அப்போது பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். சிலர் பாறைகளின் மீது ஏறி ஆபத்தான முறையில் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டதை பார்க்க முடிந்தது. சிறிது நேரத்துக்குப்பிறகு கடல் நீர் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது.






