

நடிகர் தனுஷ் படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியது.
தனுஷ் படப்பிடிப்பு
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' சினிமா படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அங்கு குண்டு வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அங்கு படப்பிடிப்பு நடத்துவதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், வனப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து புகார் செய்தனர். இதற்கிடையே, அரசு துறைகளிலும் படப்பிடிப்பு குழுவினர் முறையான அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.
போலீஸ் பாதுகாப்புடன்...
இதையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சினிமா படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு குழுவினர் அரசு துறையினரிடம் முறையான அனுமதி பெற்றனர்.
அதன்படி படப்பிடிப்பு தளத்தில் வெடி வெடிக்க கூடாது. வெளியில் இருந்து யாரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்தார்.
தொடர்ந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.