

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஒட்டேரி விரிவு பகுதி 4-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (51 வயது), இவர் மெத்தை தைக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் அஜித்குமார் (25 வயது) வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று அஜித்குமார் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததை தந்தை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் துணியால் தந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்தார். உறவினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டேரி போலீசார் கொலை செய்யப்பட்ட பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்த அஜித்குமாரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.