

சென்னை,
வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 510 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேற்கு, தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீட்டரில் இருந்து 13 கி.மீட்டராக அதிகரித்துள்ளது.
அடுத்த 12 மணிநேரத்தில் தீவிரமடையும் புயல் நாளை மாலை அல்லது இரவு கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும்.
இதனால் கடலோர மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் நாகர்கோவில், பார்வதிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து நவம்பர் 16ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.