செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

பேரணாம்பட்டில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
Published on

போதை ஆசாமி

பேரணாம்பட்டை சேர்ந்தவர் ஷகீல் அஹம்மத் என்ற பாபு (வயது 25). போதை பழக்கத்திற்கு அடிமையான இவர் கத்தியால் தனக்கு தானே கீறி காயம் ஏற்படுத்தியும், அடிக்கடி பேரணாம்பட்டு நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க. நகரில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த பாப்கார்ன் வியாபாரி அப்ரான்கான் (18) என்பவரிடம் சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அப்ரான்கான் இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தற்கொலை மிரட்டல்

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவான ஷகீல் அஹம்மத்தை தேடி வந்தனர். இந்தநிலையில் ஷகீல் அஹம்மத் மீண்டும் நேற்று பேரணாம்பட்டு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி உச்சிக்கு சென்று, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி உள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஷகீல் அஹம்மத்திடம் நைசாக பேசி கீழே இறங்கி வரும்படி அழைத்தனர். போலீசார் கூறியதை ஏற்று கீழே இறங்கி வந்த அவரை, பாப்கார்ன் வியாபாரியை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com