பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி: திமுக விமர்சனம்

நிலப்பதிவை நீதிமன்றம்தான் ரத்து செய்தது, தவெக அரசு செய்யவில்லை என்று திமுக பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி: திமுக விமர்சனம்
Published on

சென்னை,

பழனி நில மோசடி தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் ஏற்புடையதல்ல; திட்டமிட்ட சதி நடந்துள்ளது: தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?.

பழனி நில விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத்துறை அமைச்சர் முயற்சிக்கிறார். இதில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பழனிக்கு அருகே உள்ள சார் பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார் பதிவாளரை வரவைத்து முறைகேடு செய்துள்ளனர். கொடைக்கானல் சார் பதிவாளர் ஏன்?. ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த பதிவாளர் அவசர அவசரமாக ரூ.100 கோடி நிலத்தை பதிவு செய்தது ஏன்?.

பழனி மடத்தின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாது என சார்பதிவாளர் பாலகிருஷ்ணன் விடுப்பில் சென்றுவிடுகிறார். பழனிக்கு அருகே உள்ள சத்திரபட்டி, கீரனூர் சார் பதிவாளர்களை ஏன் பழனியில் டூட்டி போடவில்லை. பழனி நிலத்தை முறைகேடாக பதிவு செய்த பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நிலப்பத்திரப்பதிவை கவனிப்பவர் அல்ல. பழனி நில முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் கூறிய கருத்துகளுக்கு மாறாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

பழனி நில மோசடி விவகாரத்தில் கிரயம் செய்திருக்கக்கூடிய 2 பேர் யாரென்று போலீஸ் தரப்பில் வெளிக்காட்டவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சொத்து வாங்கக்கூடிய அளவிற்குக் கூட பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி ரூ.2 கோடியில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்?.

பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய நிலமும், கோவில்களும், கடந்த திராவிட மாடல் ஆட்சியில் பாதுகாக்கப்பட்டன. பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போட்டு பார்த்திருப்போம்; ஆனால் விஜய் ஆட்சி பழனிக்கே மொட்டை போட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் விபூதி அடித்துள்ளது தவெக. முறைகேடான அந்த நிலப்பதிவைக் கூட நீதிமன்றம்தான் ரத்து செய்தது, தவெக அரசு செய்யவில்லை.

சமூக வலைதளங்களில் இந்த அரசையும், அரசு செய்யக்கூடிய குற்றங்களையும், முதல்-அமைச்சரையும் விமர்சித்தால், இரவோடு இரவாக கைது செய்கிறது போலீஸ். ஆனால் பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய துணை சார்பதிவாளரை இன்னும் ஏன் தவெக போலீஸ் கைது செய்யவில்லை?. நிலத்தை விற்றவர்களை, வாங்கியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com