

நீர்வரத்து குறைந்தது
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.
பரிசல் இயக்க அனுமதி
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனிடையே வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வரை உற்சாகமாக பரிசல் சவாரி சென்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து காவிரி கரையோர பகுதிகளில் குளித்தனர். சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.