தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொன்ற மனைவி

தினமும் மது குடித்துவிட்டு வந்து தாக்கிய கணவரை தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை செய்தார்.
தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொன்ற மனைவி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் குஞ்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயக்கொடி (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சிங்காரவேலனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து ஜெயக்கொடியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் சிங்காரவேலன் வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, ஜெயக்கொடியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

விஷம் கொடுத்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்கொடி கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அப்போது மதுபோதையில் இருந்த சிங்காரவேலன் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.

இதுதான் தக்கசமயம் என்று நினைத்த ஜெயக்கொடி ஒரு டம்ளரின் தண்ணீர் எடுத்து அதில் குருணை மருந்தை (விஷம்) கலந்து தனது கணவர் சிங்காரவேலனிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. அதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரவேலன் தாயார் மூக்கம்மாள் உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com