உல்லாசத்திற்கு இடையூறு: கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி

தொழிலாளியான பைரேகவுடாவுக்கும் லாவண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
உல்லாசத்திற்கு இடையூறு
Published on

கோவை,

கோவை அருகே கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டார்.

கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் பிரபு(வயது40), லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவருடைய மனைவி லாவண்யா(33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

உடல் நலக்குறைவு காரணமாக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரபு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பிரபு பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் ரத்த காயங்கள் இருந்தன.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பிரபுவின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பிரபு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிரபுவின் மனைவி லாவண்யாவை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

பிரபுவின் மனைவி லாவண்யா அந்த பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தார். அவரது கடைக்கு கோவை தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்க்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரேகவுடா(39) என்பவர் சாப்பிட வந்து சென்றார். அப்போது அவருக்கும், லாவண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் பிரபுக்கு தெரியவந்தது. இதையடுத்து பிரபு அவர்களை கண்டித்ததார். இதனால் ஆத்திரமடைந்த லாவண்யா கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின்னர் பிரபு உயிர் பிழைத்ததும் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார்.

இதற்கிடையில் உல்லாசத்திற்கு இடையூராக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்டும் முடிவில் உறுதியாக இருந்த லாவண்யா மீண்டும் கள்ளக்காதலனுடன் சேர்த்து திட்டம் தீட்டினார். வீட்டில் யாரும் இல்லாத நேர்த்தில் லாவண்யா கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த பைரேகவுடா பிரபுவின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

பின்னர் லாவண்யா எதுவும் தெரியாததுபோல நோயால் கணவர் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடி நீலி கண்ணீர் வடித்துள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரையும், கள்ளக்காதலன் பைரேகவுடாவையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com