கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. அடித்து துன்புறுத்திய கணவன்.. அடுத்து நடந்த விபரீதம்

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. அடித்து துன்புறுத்திய கணவன்.. அடுத்து நடந்த விபரீதம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்த எட்டியான் மகன் ஏழுமலை(வயது 31). விவசாயியான இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா புத்திரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் ரம்யா(30) என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஏழுமலைக்கு வேறு ஒருபெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட ரம்யாயை ஏழுமலை தினமும் அடித்து துன்புறுத்துவதோடு, தாய் வீட்டுக்கு சென்று கூடுதலாக நகை, பணம் வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

சம்பவத்தன்று ரம்யா அவரது தாய் வேளாங்கண்ணியை செல்போனில் தொடர்பு கொண்டு, ஏழுமலை தன்னுடன் வாழாமல் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து கொண்டு தொடர்ந்து தன்னிடம் சண்டை போட்டு அடித்து துன்புறுத்தி வருவதாகவும், தினமும் பணம், நகை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், நீ உயிரோடு இருக்க கூடாது எனக்கூறி சென்றதாக அழுதபடியே கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.

பின்னர் மிகுந்த மனவேதனையில் இருந்த  ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜா என்பவர் வேளாங்கண்ணியை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரம்யாவின் தாய் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து ரம்யாவின் தாய் வெள்ளிமேடுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரம்யாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என திண்டிவனம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தியதால், மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com