காதலிக்க மறுத்த இளம்பெண்... கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபர்

காயமடைந்த பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காதலிக்க மறுத்த இளம்பெண்... கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபர்
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்த கடையில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணை சித்திக் ராஜா என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் காதலுக்கு இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்த வாலிபர் ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் இளம்பெண்ணிற்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் உடனே அங்கிருந்து வெளியேறினார்.

காயமடைந்த பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com