

புதுக்கோட்டை நத்தம்பண்ணையை சேர்ந்தவர் மோகன் (வயது 62). இவர் மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்றார். பக்கத்து வீட்டுக்காரர்கள் இவரது வீட்டை கவனித்து வந்தனர். இந்த நிலையில் மோகனின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மோகனுக்கும், திருக்கோகர்ணம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்து தங்களது கைவரிசையை காட்டிச்சென்றது தெரியவந்தது. இதில் 9 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. இது தொடர்பாக மோகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.