மகாமாரியம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா
மகாமாரியம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா
Published on

வலங்கைமான்:

வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சக்தி, ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பிரசித்தி பெற்ற பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் ஆவணி கடைசி ஞாயிறு அன்று தெப்பத்திருவிழா நடைபெறுவதும் வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடந்தது. முன்னதாக மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி அன்ன வாகனத்தில், வடக்கு அக்ரஹாரம், கடைத்தெரு, கும்பகோணம் ரோடு வழியாக வீதி உலா நடந்தது. காலையில் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மகா மாரியம்மன் மின்னொளி மற்றும் சிறப்பு அலங்காரத்தில் திருக்குளத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளச்செய்து, குளத்தில் 3 முறை வலம் வந்து தெப்பத்திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com