

ஈரோடு,
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், நோய் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து 9, 11-ம் வகுப்புகளுக்கும் 30 முதல் 40 சதவீதம் வரையில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டதோடு, அவர்களுக்கான நேரடி வகுப்புகளும் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அதனை தொடர்ந்து 6,7,8 ஆகிய வகுப்புகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அவர்களுக்கும் விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் . 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.