40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கண்டிப்பாக இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு

மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 24 பாட வேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்ணயம் செய்ய வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை பின்பற்ற வேண்டும். மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவர்களும், ஊரகப்பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல், பணி நிர்ணயம் செய்யும்போது மொழிப்பாடத்தில் 24 பாடவேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாடவேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம். இதுதவிர ஒரு பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து அதில் ஒரு பணியிடம் உபரியாக இருப்பின் அதில் பணியாற்றுபவர்களில் இளையோரை உபரியாக காண்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com