கருணை கொலை செய்ய வேண்டும்

கருணை கொலை செய்ய வேண்டும்
கருணை கொலை செய்ய வேண்டும்
Published on

இடத்தை காலி செய்யக்கோரி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கருணை கொலை செய்ய வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

மனு

நாகை செம்மரக்கடைத்தெருவை சேர்ந்தவர்கள் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் இல்லாததால் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகை செம்மரக்கடை தெரு பகுதியில் நாங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் நாங்கள் குடியிருந்து வரும் நத்தம்புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக எங்களை காலி செய்யும்படி அடியாட்களை வைத்து மிரட்டி வந்தனர்.

கருணை கொலை

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து புகார் தெரிவித்தோம். அப்பாது அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்கள் எங்களை மிரட்டுவதை கைவிட்டு வெளிநாடு சென்று விட்டனர். கடந்த சில மாதகாலமாக அடியாட்களை வைத்து மீண்டும் நாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை காலி செய்ய வேண்டும். இல்லையெனில் மின்சாரம், குடிநீர் இணைப்பு ஆகியவற்றை துண்டித்து விடுவோம் என மிரட்டுகின்றனர்.

50 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு ரசீது, நகராட்சி வரி ரசீது ஆகியவை செலுத்தி வருகிறோம். எனவே எங்களை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 20 குடும்பங்களை சேர்ந்தவர்களையும் கருணை கொலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் இதுகுறித்து விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com