குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

வேலூர் சார்பனாமேட்டில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
Published on

வேலூர்

வேலூர் சார்பனாமேட்டில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குப்பை கொட்ட எதிர்ப்பு

வேலூர் சார்பானாமேடு தேவராஜ்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வந்தது. அந்த மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து மையத்தில் குப்பை பிரிக்கப்படும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதியில் மீண்டும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். குப்பை கொட்டுவதை தடுக்கும் வேண்டுமென்று வலியுறுத்தி நேற்று அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பொதுமக்கள் அங்கு பலர் திரண்டிருந்தனர்.

தகவல் அறிந்ததும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்டுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகே ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் போன்றவை செயல்படுவதால் பொதுமக்கள், குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நோய் பரவும் அபாயமும் உள்ளது.

பரபரப்பு

தரைகீழ் தண்ணீர் தொட்டி உள்ளதால் நீர் மாசுபடும் நிலை உள்ளது. எனவே இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றனர். அந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவது தடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com