

சென்னை,
குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு நடந்த குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு புகார்கள் வெளியாகின. இந்த நிலையில் இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தேர்வாணையம் அண்மையில் முடிவுகள் வெளியிட்ட குரூப்-2 தேர்வில் 1997-ம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்துக்குரியதாக உள்ளது என சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகளாக வெளியாகின. இந்த சந்தேகங்கள் தொடர்பாக தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் தவறு ஏதும் நடக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்துள்ள தேதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டு தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்றவுடன் தேர்வர்களின் முழுவிவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
முழுவிவரங்கள் வெளியிடப்படும்
இதுபோலவே சமீபத்தில் நடந்துமுடிந்த ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வில் இளநிலை கட்டிட கலைஞர் பணிக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 39 தேர்வர்களில் சென்னை மையத்தில் இருந்து மட்டும் 31 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாகவும் தேர்வாணையம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. மேற்சொன்ன 31 தேர்வர்களும் 3 வெவ்வேறு தேர்வுக்கூடங்களில் 21 வெவ்வேறு அறைகளில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களும் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இப்பணிகளுக்கான கலந்தாய்வு நிறைவுற்றுள்ள நிலையில், தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிந்ததும் தேர்வர்களின் முழுவிவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
குற்றவியல் நடவடிக்கை
மேலும் இதுபோன்ற யூகங்களின் அடிப்படையிலான செய்திகளால் நல்ல முறையில் தேர்விற்கு தங்களை தயார்செய்து தேர்வில் நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவது வருத்தத்துக்குரியது. தேர்வாணையம் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவோர் மீது தனது கண்டனத்தை பதிவுசெய்கிறது.
தகுந்த ஆதாரங்களுடன் பெறப்படும் குறிப்பிட்ட புகார்கள் மீது தேர்வாணையம் எப்போதும் உடனடி ஆய்வு செய்து தவறுகள் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் இருப்பின் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்து வருகிறது. இனிவரும் காலங்களிலும் தேர்வாணையத்தின் இந்த நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது.
எனவே யூகங்களின் அடிப்படையில் தவறான செய்திகளை வெளியிடவேண்டாம் என்றும், அச்செய்திகளை நம்பவேண்டாம் என்றும் தேர்வாணையம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.