

சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-
சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் வாங்கியதில் 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறித்த ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறைகளே இல்லை. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல்களை அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியும் திமுக அரசும், திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் வழக்கு பதிவு செய்யக்கூட மறுத்து வருகிறது.
திமுக அரசில் ஊழலுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால் அது மின்துறை, டாஸ்மாக் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும். அவர் மின்துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றிகள் வாங்கியதில் நடந்த 397 கோடி ரூபாய் ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி.
செந்தில் பாலாஜி செய்த ஊழல்கள் குறித்து விசாரிக்க தனி ஆணையமே அமைக்க வேண்டும். செந்தில் பாலாஜி போன்ற ஊழல்வாதிகள் இனியும் தப்ப முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.