விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அரசியலும் இருக்காது - திருமாவளவன்

35 ஆண்டுகளாக கடும் உழைப்பு மூலம் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்றுள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொன்னம்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் இனிமேல் விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து விட்டு எந்த ஒரு அரசியல் நகர்வும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக நாம் பெரிய உழைப்பை கொடுத்து இருக்கிறோம். 35 ஆண்டுகளாக கடும் உழைப்பு மூலம் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்றுள்ளோம். இந்த கட்சி மேலும் வளர தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

பா.ஜனதா இந்து மதம்தான் பெரியது என்கிறது. மதத்தின் பெயரால் பல்வேறு அடக்குமுறைகள் நடந்தாலும், வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டாலும் விளிம்பு நிலை மக்கள் இந்து மதத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

இந்திய அரசியலமைப்பு சாசனம் மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தமிழ்நாட்டில் அத்தகைய சட்டத்தை கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்து போராடினேன். இந்து என்ற அடையாளம் வேண்டாம். தமிழர்கள் என்ற அடையாளம் போதும் என்று அப்போது எல்லோருக்கும் தூய தமிழ் பெயரை சூட்டினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com